ஜனாதிபதி தேர்தலின்போது தம்மை வெளிப்படையாக ஆதரித்த – தமக்காக தீவிர பரப்புரைகளில் ஈடுபட்ட தமிழ் முற்போக்கு கூட்டணிக்குகூட ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்காமல், மயந்த திஸாநாயக்கவை தேசியப்பட்டியல் எம்.பியாக்கி, காமினி திஸாநாயக்க குடும்பத்தை மகிழ்வித்தார் சஜித் பிரேமதாச.
ஆனால் இன்று ஐக்கிய மக்கள் சக்தியின் முடிவை எட்டி உதைத்துவிட்டு, ரணில் – ராஜபக்ச அரசை குஷிப்படுத்தும் வகையில் மயந்த திஸாநாயக்க செயற்பட்டுள்ளார்.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவே செயற்பட்டுவந்தார்.
எனினும், 9ஆவது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடரை ஜனாதிபதி இடைநிறுத்தியதால் மேற்படி குழுவின் செயற்பாடுகளும் முடிவுக்கு வந்தது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமைப்பதவிக்கு கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை நியமிப்பதற்கு எதிர்க்கட்சி தீர்மானித்திருந்தது.
இதற்கான பரிந்துரையும் சபாநாயகரிடம் முன்வைக்கப்பட்டது.
எனினும், ஆளுங்கட்சி எம்.பிக்களின் ஆதரவுடன், எதிரணி எம்.பியான மயந்த திஸாநாயக்க அந்த பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைமைப்பதவி எதிரணிக்கே வழங்கப்பட வேண்டும். எனவேதான் மயந்த திஸாநாயக்கவின் பெயரை முன்மொழிந்து, அவரை தலைமைப்பதவிக்கு அமர்த்தியுள்ளது ஆளுங்கட்சி.
எதிரணி சார்பில் ஹர்ஷவின் பெயர் முன்மொழியப்பட்டிருப்பதால், மேற்படி பதவியை ஏற்க முடியாது என சபாநாயகருக்கு தெரியப்படுத்துமாறு எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல, மயந்த திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.
மயந்த திஸாநாயக்க, நவீன் திஸாநாயக்கவின் சகோதரர். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கின்றார்.
ரணசிங்க பிரேமதாச ஆட்சிகாலத்தில், அவருடன் முட்டிமோதியவர்களில் பிரதானமானவர் காமினி திஸாநாயக்க. ஐ.தே.கவில் இருந்து வெளியேறி புதிய கட்சியைக்கூட உருவாக்கினார்.
ரணசிங்க பிரேமதாசவின் மகனே சஜித். காமினி திஸாநாயக்கவின் மகனே மயந்த திஸாநாயக்க.
ஆர்.சனத்