வவுனியா, ஓமந்தை – சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சாவடைந்தார்.
இந்தக் கொடூர சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று மாலை ஓமந்தை – சேமமடு பகுதியில் மாடுகளைச் சாய்த்துக் கொண்டு வந்த குடும்பஸ்தர் மீது குழுவொன்று வாளால் வெட்டியுள்ளது. இதனால் படுகாயமடைந்த அவர் அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அவர் ஏற்கனவே சாவடைந்துள்ளார் என்று வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டது.
நாவற்குளம் பகுதியை சேர்ந்த செல்வநிரோயன் (வயது 46) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே வாள்வெட்டுக்கு இலக்காகிச் சாவடைந்தார்.
சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










