ஓஎம்பி எனப்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக 25 உப பணிக்குழுக்கள் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16 ஆயிரத்து 966 முறைப்பாடுகளில் 10 ஆயிரத்து 517 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
இதற்குரிய நடவடிக்கையை 2027 ஆம் ஆண்டுக்குள் நிறைவு செய்யும் நோக்கிலேயே மேற்படி குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நேற்றைய ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
” 2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தாபிக்கப்ப்பட்டுள்ளது.
காணாமல்போன மற்றும் காணக்கிடைக்காத ஆட்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுடைய உறவுகளுக்கு அறிக்கைகளை வழங்குதல் இவ் அலுவலகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதுவரை குறித்த அலுவலகத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 16 ஆயிரத்து 966 முறைப்பாடுகளில் விசாரணைகளுக்காக மேலும் 10 ஆயிரத்து 517 முறைப்பாடுகள் காணப்படுகின்றன.” – என்று குறிப்பிட்டார்.
அதற்கமைய இன்னலுற்றவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் விசாரணை மற்றும் குறித்த கடமைகளை நிறைவேற்றுவதற்கான விசேட கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும், குறித்த பணிகளுக்காகவும் ஓய்வுநிலை நீதிபதிகள், சிரேஷ்ட நிர்வாக அலுவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தகைமையுடன் கூடிய நபர்கள் 75 பேருடன் கூடிய உப பணிக்குழு 25 குழுக்களை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.” – எனவும் அவர் மேலும் கூறினார்.