கண்டியில் வசிக்கும் மாற்றுத் திறனாளி சிறுவன் கின்னஸ் சாதனை

கண்டியில் தற்போது வசித்துவரும் இந்திய நாட்டைச் சேர்ந்த சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) என்ற மாற்றுத் திறனாளியான சிறுவன் ஆன்லைன் நிகழ்வில் பங்கேற்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சித்திரக் கலைஞர்கள் தங்களுடைய சித்திரங்களை முகநூல் ஊடாக அதிகளவான ஒவியங்களை பதிவேற்றுவதன் மூலமாக இந்த போட்டியில் பங்குபற்ற முடியும்.

குறித்த போட்டியில் இலங்கை, இந்தியா உட்பட 26 நாடுகளைச் சேர்ந்த 200 மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் போட்டியாளர்களால் 1149 சித்திரங்களை இந்த போட்டிக்காக முகநூல் ஊடாக பதவேற்றியிருந்ததுடன் இதில் 797 சித்திரங்கள் போட்டிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சித்திரங்களை போட்டியாளர்கள் ஒரு மணி நேரத்தில் பூர்த்தி செய்துள்ளதுடன் பதிவேற்றத்தின் பொழுது போட்டியாளர்கள் தாங்கள் சித்திரத்தை தீட்டுகின்ற புகைப்படம் ஒன்றையும் பதவேற்ற வேண்டும் என்பதே இதன் நிபந்தனையாகும்.

மேலும் இந்த போட்டியானது விசேடமாக இந்த கொரோனா தொற்று காலத்தில் விசேட திறனாளிகள் முடங்கிவிடக்கூடாது என்பதற்காகவே நடத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.இந்த போட்டியில் செல்வன் சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) வெற்றி பெற்றுள்ளதாக கிண்ணஸ் நிறுவனம் அங்கீகரித்து அவருக்கான சான்றிதளையும் ஒன்லைன் மூலமாக வழங்கியுள்ளது.

அவருடைய மூலப் பிரதி மிகவிரைவில் அவருடைய கைகளுக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மாற்றுத் திறனாளியான செல்வன் சர்வஜித் கிருஸ்ணபிரசாத் (வயது 14) ஒவியங்களை வரைவதில் சிறுவயது முதல் அதிக ஆர்வம் காட்டிவந்துள்ளதுடன் அவர் ஏற்கனவே பல சர்வதேச போட்டிகளிலும் பங்குபற்றியுள்ளார்.

அவர் தற்பொழுது கண்டியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் ஏனைய மாணவர்களுக்கு முன் உதாரணமாக திகழும் செல்வன் சர்வஜித் கிருஸ்ணபிரசாத் தொடர்ந்து முழுமையாக ஒவியங்களை தீட்டுவதில் ஈடுபட்டு வருவதுடன் எதிர்வரும் காலத்தில் இன்னும் பல சர்வதேச போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்பதே அவருடைய எதிர்பார்ப்பாகும்.

நுவரெலியா நிருபர் எஸ்.தியாகு

.

Related Articles

Latest Articles