கம்பளை நகரில் கண்டி வீதியில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனை நிலையமும் ,அதன் களஞ்சியசாலையும் நேற்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது காலாவதியான உரம் மற்றும் பூச்சிக்கொல்லி என்பன கைப்பற்றப்பட்டன.
விமானப்படை புலனாய்வு பிரவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கம்பளை விஷேட அதிரடிப்படை அதிகாரிகள், விவசாய திணைக்கள மற்றும் பீடைகொல்லி பிரிவு நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளின் ஆகியோரின் பங்களிப்புடனேயே சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஒரு கோடி ரூபாவிற்கு மேல் பெறுமதியான சட்ட விரோத உரம் மற்றும் பூச்சிகொல்லிகளையும் கைப்பற்றினர்.
உர பற்றாக்குறை நிலவிய சந்தர்ப்பத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்ட உரவகைகள் மேற்படி கடையில் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை விமானப்படை புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் கிடைத்துள்ளது.
விவசாயிகளை ஏமாற்றி நீண்டகாலமாக காலாவதியான பொருட்களை விற்றுவந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள் , பதிவு செய்யப்படாத இரசாயன உரங்கள், காலாவதியான விவசாய ரசாயணப் பொருட்கள் மற்றும் என்பன கைப்பற்றப்பட்டன.
மேற்படி சட்டவிரோத பொருட்கள் அனைத்தும் தினசரி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சட்டப்பூர்வ உரங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன எனக் கூறப்படுகின்றது.
2014 இல் காலாவதியான பொருட்கள்கூட விற்பனைக்கு இருந்துள்ளது. சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.