அரச பஸ்ஸில் காதலியை பார்க்கச் சென்று, விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பஸ் நடத்துனர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பஸ் ரம்புக்கன – ஹதரலியத்த வீதியில் இயங்கும் பஸ் என்பதுடன், மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு ரம்புக்கனை நோக்கி பயணத்தை ஆரம்பிப்பதற்காக ஹதரலியத்த பஸ் நிலையத்தில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாரதியின் வீடு அருகாமையில் அமைந்துள்ளதால் தினமும் பஸ்ஸை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் சென்றாலும் நடத்துனர் பேருந்திலேயே தங்கியிருந்துள்ளார்.
பஸ் நடத்துனர் ரம்புக்கனை டிப்போவுக்குச் சொந்தமான குறித்த பஸ்ஸை, தனது காதலியைப் பார்ப்பதற்காக 9 கிலோமீற்றர் தூரம் ஓட்டிச் சென்று, மீண்டும் திரும்பிய போது விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.எனினும், விபத்தின் பின்னர் பஸ்ஸை மீண்டும் ஹதரலியத்த பஸ் தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு நடத்துநர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
