தலவாக்கலை கிறேட்வெஸ்டன் மலைத்தோட்டத்திலுள்ள காட்டுப்பகுதியில் மிக நீண்டநாட்களாக மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி செய்யும் இடத்தை நேற்று முன்தினம் (09) இரவு பொலிஸார் சுற்றிவளைத்தனர்.
இதன்போது 125 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பெருமளவிலான உபகரணங்களுடன் சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
காட்டுப்பகுதியில் தோட்டத்தொழிலாளர்களை இலக்கு வைத்து கசிப்பு உற்பத்தி இடம்பெற்றுவருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இச்சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நேற்று (10) நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
தலவாக்கலை பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பிரதான பரிசோதகர் ரத்னசிறி உடுகம, பொலிஸ் சார்ஜன்ட்களான 58772 அபேரத்ன, 55762 சாந்த குமார், பொலிஸ் கான்ஸ்டபிள்களான 8994 பாலச்சந்திரன் மற்றும் 89033 திலகர் ஆகியோரினால் இச்சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.