கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக கம்பளை நகரில் 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் நேற்று முதல் (29) மூடப்பட்டுள்ளன.
மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு வியாபாரநிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிஸ்கட் கம்பனியின் விற்பனை முகவர் காய்ச்சல் காரணமாக கடந்த 24 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். இதன்போது எழுமாறாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. இதில் கம்பளை, அட்டபாகை பகுதியைச் சேர்ந்த 29 வயதான விற்பனை முகவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த விற்பனை முகவர், வியாபாரம் நிமித்தம்வந்துசென்ற வியாபார நிலையங்கள் நேற்று முதல் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கம்பளை நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக வேகமாக பரவிவருகின்றது.
கம்பளை நிருபர் – லாவண்யா










