தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவினால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் தத்தமக்கு அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
குருநாகலில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். 2020 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போதுதான் நாட்டு மக்களுக்கு சிறப்பாக செய்ய போகிறார். அதற்கு இதுதான் சரியான நேரம் என அவர் உணர்ந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க கோட்டாபாய ராஜபக்ச உட்பட இந்த குழுவினர் இனவாதம் மற்றும் மதவாதத்தை பயன்படுத்தினர். இனங்களுக்கு இடையில் ஆத்திரத்தை தூண்டியதுடன் சூழ்ச்சி மற்றும் பயங்கரவாத்தை ஏற்படுத்தினர். இவற்றை பயன்படுத்தியே 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை கவிழ்த்தனர்.
இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நித்திரையில் இருந்து விழித்தவர் போல், கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்க ஜனாதிபதி செயலணிக்குழுவை நியமித்துள்ளார்.
நாட்டில் உள்ள படித்த புத்திசாலி மக்களுக்கு இதனை நாங்கள் விளக்கப்படுத்த வேண்டியதில்லை. எதற்காக தயாராகி வருகின்றனர். நாட்டை எங்கு கொண்டு செல்ல போகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்பட்டதை நாங்கள் நன்றாக பார்த்தோம். ஜனாதிபதி இவ்வாறு நாட்டை எந்த திசை நோக்கி கொண்டு செல்கிறார் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
கடந்த காலத்தில் நியமித்த ஜனாதிபதி செயலணிகளை நோக்கி பார்க்கும் போது, அவை பற்றி சிரித்தாலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி செயலணிக்குழுவினால், ஒரே நாடு ஒரே சட்டம் என்பது மக்களுக்கு இல்லை என்றாலும் தத்தமக்கு அது நடைமுறைப்படுத்தப்படும். இறுதியில் நாடும் இல்லாமல் போகும் நிலைமை உருவாகும் எனவும் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.