“ஆயுத புரட்சிமூலம் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரவில்லை. ஜனநாயக வழியிலேயே அரியணையேறியுள்ளது. எனவே, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே கள்வர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் கள்வர்கள் பிடிப்பதில் தாமதம் என்ற மக்களின் அதிருப்தியை நாம் ஏற்கின்றோம்.”- என்று அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“தேசிய மக்கள் சக்தியினர் பதவி, பட்டங்களுக்காக அரசியல் செய்யும் நபர்கள் கிடையாது. எவரும் பதவிகளைக் கேட்டு பெறுவதில்லை. கட்சியால் பதவிகள் கையளிக்கப்படும். அந்த பொறுப்பு சரியாக நிறைவேற்றப்படும். அதற்காக அர்ப்பணிப்புடன் தோழர்கள் செயற்படுவார்கள்.
தேசிய மக்கள் சக்தியினருக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்கியும், கள்வர்களை பிடிப்பதில் அவர்கள் வேகம் காட்டவில்லை, கள்வர்களை சிறையில் அடைக்கவில்லை என்ற கவலை மக்கள் மத்தியில் உள்ளது. அதனை நாம் ஏற்கின்றோம்.நாம் ஆயுத புரட்சிமூலம் ஆட்சியை பிடிக்கவில்லை.
கியூபா மற்றும் வடகொரியாவில்போன்றும் ஆட்சியை பிடிக்கவில்லை. ஜனநாயகம், சட்டம் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரமே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட வகையிலேயே செயற்படவேண்டியுள்ளது. அதன் பிரகாரம் நாம் செயற்பட்டுவருகின்றோம். மேர்வின் சில்வா, கெஹலிய ரம்புக்வெல்ல, பிரசன்ன ரணவீர உள்ளிட்டவர்கள் சிறையில் உள்ளனர். சட்டம் செயற்பட்டுவருகின்றது. அது உரிய வகையில் செயற்படுத்தப்படும்.”- என்றார்.