க.பொ.த. உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளினடிப்படையில் ப/சரஸ்வதி மத்திய கல்லூரி (தேசியபாடசாலை) விஞ்ஞானம், கணிதம், வர்த்தகம், கலை மற்றும் தொழினுட்ப பிரிவுகள் உள்ளடங்களாக அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் சிறந்தவோர் பாடசாலையாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது. பதுளை சரஸ்வதி மத்திய தேசியக் கல்லூரியில் 94 மாணவர்கள் க.பொ.த. உயர்தரத்தில் தோற்றி, 49 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றுள்ளனர்.
மிக நீண்ட இடைவேளைக்குப் பின் செல்வன் டீ. கபிலக்ஷன் மற்றும் செல்வன் எஸ். கிருபாகரன் ஆகிய இருவரும் கணித பிரிவில் ஏ2பி சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் முறையே 86ம் மற்றும் 110ம் இடங்களையும் தமிழ் மொழிமூல மாணவர்களில் மாவட்டத்தில் முதலிரண்டு இடங்களைப் பெற்று பொறியில் பீடத்திற்கு தெரிவாகும் வாய்ப்பைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இவர்கள் உள்ளடங்களாக மேலும் இருவர் பௌதீக விஞ்ஞானப்பிரிவில் பல்கலைக்கழக தகைமையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
விஞ்ஞானப்பிரிவில் செல்வன். ஜி. சதேஷ் மற்றும் செல்வி. ஷெரோன் அனிடா ஆகிய இருவரும் 2சிஎஸ் சித்திகளைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு மூவர் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் பல்கலைக்கழக தகைமை பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் செல்வன். எஸ். மிருதுகேஷ் 3ஏ சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 149ம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதோடு 11 மாணவர்கள் வர்த்தகப்பிரிவில் பல்கலைக்கழக தகைமையைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
உயிர்முறைத் தொழினுட்பப் பிரிவில் செல்வன் ஜே.எஸ்.எம். நபீல் 3பி சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் 29ம் இடத்தையும் பதுளை வலய தமிழ் மொழிமூல மாணவர்களில் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளதோடு மேலும் 5 மாணவர்கள் உயிர்முறைத் தொழினுட்பப் பிரிவில் பல்கலைக்கழக தகைமைகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இது தவிர கலைப்பிரிவில் 17 மாணவர்களும் இயந்திரவியல் தொழினுட்பப் பிரிவில் 8 மாணவர்களும் பல்கலைக்கழக தகைமையைப் பெற்றுள்ளனர். இவ்வாண்டு கிடைக்கப் பெற்ற பதுளை சரஸ்வதி மத்திய கல்லூரியின் உயர்தர பெறுபேறுகளினடிப்படையில் 49 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளுடன் பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்றுக் கொண்டு பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.










