சென்னை, பலாலிக்கிடையிலான விமான சேவையை அதிகரிப்பது உள்ளிட்ட பல அபிவிருத்தி திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்திய அதிகாரிகள் இது குறித்து வடமாகாண ஆளுநருடன் கலந்துரையாடினர்.ஆளுநரின் செயலகத்தில் இவர்கள் சந்தித்து கலந்துரையாடியதாகத் தெரிய வருகிறது.
வட மாகாணத்தில் உள்ள சுற்றுலாத் தளங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்,இவர்கள் கவனம் செலுத்தினர்.
இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்வஞ்சல் பாண்டே உள்ளிட்ட குழுவினர்,இதன் சாத்தியங்கள் பற்றி வட மாகாண ஆளுநருடன் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் செவிதி சாய் முரளியும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
பலாலி விமான நிலைய அபிவிருத்தி, சென்னையிலிருந்து பலாலிக்கான விமான சேவையை அதிகரித்தல் மற்றும் காங்கேசன்துறை தூத்துக்குடிக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை போன்ற திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மின்னுற்பத்தியை மேற்கொள்ளுதல் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.