ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும், தனக்கும் இடையில் அரசியல் ரீதியில் மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் போலியானவை என்று பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“போலிகளை உருவாக்குவதிலும், கட்டுக்கதைகளை பரப்புவதிலும் சிலர் வல்லவர்கள். இப்படியானவர்கள்தான், எனக்கும், தோழர் அநுரவுக்கும் இடையில் அரசியல் போர் ஏற்பட்டுவிட்டதாகக் கூறிவருகின்றனர்.
நாங்கள் தற்போது பேசுவதில்லையாம், விமர்சித்துக்கொள்கின்றோமாம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரை தெரிவு செய்யும்போது, நான் கூறிய நபர் தெரிவுசெய்யப்படாததால் எனக்கு கடும் கோபம் ஏற்பட்டதாம். அநுரவுடன் சண்டை பிடித்தேனாம்.
ஏதோ கூட்டத்தில் இருந்தவர்களைப்போல கதைகளைக் கூறிவருகின்றனர். இவை போலியான தகவல்கள். இது பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை. இருந்தாலும் போலிகளுக்கு முடிவு கட்ட வேண்டும். எனக்கும், தோழர் அநுரவுக்கும் இடையில் எவ்வித சண்டையும் இல்லை. போட்டியும் இல்லை.” – என்றார்.
