மலையக மறுமலர்ச்சியை அடிப்படையாகக்கொண்டு அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட மலையக சாசனத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டம் அமுலுக்கு வந்த பிறகு எமது சமூகம் நிச்சயம் மாற்றத்தை நோக்கி நகரும் – என்று இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
நாட்டினதும், நமதும் வளமான எதிர்காலத்துக்காக பொருளாதார ஸ்தீரத்தன்மை ஏற்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று பாரத் அருள்சாமியின் ஏற்பாட்டில் கண்டி குயின்ஸ் விருந்தகத்தில் நடைபெற்றது.
கண்டி வர்த்தக சமூகத்துடன் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக பங்கேற்றிருந்தார். முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுமகவும் கலந்துகொண்டிருந்தார்.
வங்குரோத்து நிலையில் இருந்த எமது நாட்டு பொருளாதாரத்தை ஜனாதிபதி மீட்டுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்த ஸ்தீரப்படுத்துவதற்கு வர்த்தக பிரமுகர்கள், உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் கைத்தொழில் பேட்டை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைய வேண்டும் என இதன்போது அழைப்பு விடுக்கப்பட்டது.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் பங்களிக்கும் வர்த்தக பிரமுகர்கள் எதற்காக ஜனாதிபதி ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதியின் பொருளாதார வேலைத்திட்டம் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
அதேவேளை மலையக சாசனத்தின் ஊடாக ஏற்படுத்தப்படவுள்ள மாற்றம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாகவும் வர்த்தக சமூகத்துக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் விளக்கமளித்தார்.
அதேபோல அரசாங்கத்தின் வரிக்கொள்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம விபரித்துள்ளார்.
தமது நன்றியுரையின்போது, அழைப்பையேற்று கூட்டத்தில் பங்கேற்றிருந்த வர்த்தகர்கள், உற்பத்தியாளர்கள், கைத்தொழில் பேட்டை உரிமையாளர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களுக்கு பாரத் அருள்சாமி நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன், இக்கூட்டத்தை வெற்றிகரமாக உறுதுணையாக இருந்தவர்களுக்கும், தமிழ் வர்த்தக சங்க தலைவர், செயலாளர் உள்ளிட்ட அங்கத்தவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
கண்டியில் வர்த்தக துறை மட்டுமல்ல எல்லா துறைகளையும் மேம்படுத்துவதற்கு இணைந்து பயணிப்போம் என இதன்போது பாரத் அருள்சாமி அழைப்பு விடுத்தார்.