வடக்கு, கிழக்கில் இடம்பெறும் அறவழிப்போராட்டங்களை ஒடுக்காது, அம்மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – என்று தமிழ் முற்போக்கு கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான கலாநிதி இராதாகிருஷ்ணன் எம்.பி. இவ்வாறு வலியுறுத்தினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பொத்துவில் முதல் பொலிகண்டிவரை நடைபெற்ற போராட்டத்தை ஒடுக்குவதற்கு பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. போராட்டம் முடிவடைந்த பின்னரும் விசாரணைகள் தொடர்கின்றன. வடக்கு, கிழக்கில் தற்போதும் அறவழியில் போராட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இவற்றுக்கு இடையூறுகளை விளைவிக்காமல், மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு முன்வரவேண்டும்.” என்றார்.