” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு தீர்வை தேடாமல், ஆளுங்கட்சி அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,
” இந்த அரசுமீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். ஆனால் நம்பிக்கை தெரிவிக்கும் யோசனைகள் ஆளுங்கட்சிக்குள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆளுங்கட்சி கூட்டத்தில் 86 பேர் ஆதரவு வழங்கியுள்ளனர். நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை என்பது 113. எனவே, 86 பேர் ஆதரித்தால், அதனை பெரும்பான்மை என ஏற்றுக்கொள்ள முடியுமா?
ஜனாதிபதி பதவியில் இருக்கட்டும், பிரதமர் பதவி விலகட்டும் ஒரு ஒரு சாராரும், இல்லை, பிரதமர் பதவியில் இருக்கட்டும், ஜனாதிபதி வீடு செல்லட்டும் என மற்றுமொரு சாராரும் ஆளுங்கட்சிக்குள் குறிப்பிடுகின்றனர். ஆட்சியாளர்கள் இவ்வாறு அரசியல் ஈதாட்டத்தில் ஈடுபடுகின்றனர். மக்கள் பிரச்சினைக்கு தீர்வை தேடவில்லை.
வரவு – செலவுத் திட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும். எமது ஆட்சியில் விசேட ஊழல் ஒழிப்பு பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும். அதன்மூலம் பதுக்கப்பட்டுள்ள பணம் எமது நாட்டுக்கு கொண்டுவரப்படும்.” – என்றார்.
