” தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் தொழில் பிணக்குகளுக்கு தொழிற்சங்கங்களும், தோட்ட முகாமைத்துவ நிர்வாகமும் தொழிற்சங்க,தொழிலுறவு ரீதியாகவே தீர்வை காண வேண்டும்.
தோட்ட நிர்வாகங்கள் அண்மைக்காலமாக தொழிற்சங்க சட்ட வரம்புகளை மீறி அப்பாவி தொழிலாளர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் செய்துவருகின்றன. இதனை அடிப்படையாகக்கொண்டு பொலிஸாரும் கடும் நடவடிக்கை எடுக்கின்றனர். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.”
இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கண்டிக்கு பயணம் மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட குழுவினர் கண்டியில் பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் பொலிஸ்மா காரியாலயத்தில் இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சர் மேற்படி விடயத்தை பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவந்ததாக தெரிவித்தார்.
அவர் இந்த சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது
” தொழிற்சங்க பிணக்குகளுக்கு தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு எதிரான முறைப்பாடுகளை செய்வதனால் தொழிற் சங்க நடவடிக்கைகளுக்கு இடையூராக பொலிசாரின் தலையீடுகள் அதிகரிக்கிறது.
மேலும் காலம் காலமாக தோட்டங்களில் தொழில் பிணக்குகள் ஏற்படும் போது அங்கு தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் அமர்ந்து பேசியே பிணக்குகளை தீர்த்து வந்துள்ளது. அண்மைக்காலமாக தோட்டத் தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் இடையிலான பிரச்சினையில் மூன்றாம் தரப்பாக பொலிசார் தலையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தொழிற்சங்க விடயத்தில் பொலிசார் தலையிடுவதை விலக்கி கொள்ள வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தங்களின் கவனத்திற்கு தெரிவிக்கின்றது.
தொழிலாளர்கள் பிரச்சினை தொழிற்சங்க ரீதியாகவே தீர்வுக்காணப்பட வேண்டும் . அத்துடன் தொழில் உறவு ரீதியாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை மாற்றிக்கொள்ள முடியாது என இராஜாங்க அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விலக்கியுள்ளார்.
அத்துடன் இந்திய வம்சாவளி மக்கள் சமூகத்தில் உள்ள தோட்டப்பகுதி இளைஞர் , யுவதிகளை இலங்கை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், இதற்கென ஒரு விசேட திட்டத்தை கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டு்ம்.
அதேநேரத்தில் இந்த நடவடிக்கையை பிரஜாசக்தி செயல் திட்டத்தின் ஊடாக மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தெரிவித்தார்.
மேலும் மத்தியமாகணத்தில் இடம் பெற்று வருகின்ற குற்ற சம்பவங்களை தடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொலிசாருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இராஜாங்க அமைச்சர் பொலிஸ்மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ்மா அதிபர் கடந்த காலங்களில் மறைந்த தலைவர்களான அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான மற்றும் அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் பொலிசாருக்கு பக்கப்பலமாகவே இருந்துள்ளனர்.
அதே நேரத்தில் மலையக மக்களின் பாதுகாப்புக்கென பல செயற் திட்டங்களையும் அவர்கள் அறிமுகப்படுத்தியிருந்தனர்.
அந்த வகையில் அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான் மற்றும் ஆறுமுகன் தொண்டமான் வழிவந்துள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானும் நாட்டினுடைய சட்டம் மற்றும் நீதியை பாதுகாப்பதற்கும்,மக்களை பாதுகாப்பதற்கும் பொலிஸ் தரப்பில் அனைத்து உதவிகளையும் வழங்குவதாகவும் இதற்கான திட்டங்கள் வகுக்கப்படுமெனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்த விசேட சந்திப்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கணகராஜ் , துரை மதியுகராஜா,எஸ்.சிவஞானம்,உட்பட பிரஜா சக்தி பணிப்பாளர் பாரத் அருள்சாமி,மாத்தளை நகரசபை மேயர் எஸ்.பிரகாஷ் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துக்கொண்டனர்.










