தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் இன்று முற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளியொருவர், திடீரென வழுக்கி விழுந்துள்ளார்.
இதனால் அவருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. எனினும், அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு தோட்ட நிர்வாகம் போக்குவரத்து வசதியை செய்துகொடுக்கவில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன், அனர்த்தம் ஏற்பட்ட நாளில் அவருக்கான சம்பளம்கூட வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினர்.
நிர்வாகத்தின் இந்த செயலை கண்டித்தும், தமக்கான தொழில் உரிமைகளை வழங்குமாறு வலியுறுத்தியுமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தொழிலாளர்கள்,
” தோட்டங்கள் காடுகளாக மாறிவருகின்றன. அட்டைக்கடி, குளவிக்கொட்டுக்கு மத்தியிலுயே வேலைசெய்யவேண்டிய நிலை உள்ளது. எனினும், நிர்வாகத்தால் கோரப்படும் பச்சை கொழுந்து அளவை வழங்கிவருகின்றோம்.
தொழிலின்போது எமக்கு விபத்து நிகழ்ந்தால் அது தொடர்பில் நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை.” – எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
பொகவந்தலாவ நிருபர்
