நாடாளுமன்ற பேரவையின் அடுத்த கூட்டம் 10 ஆம் திகதி!

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையின் கன்னி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் முதலாவதாக கருத்து தெரிவித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன , நாடாளுமன்ற பேரவைக்கு நியமிக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களையும் கௌரவத்துடன் வரவேற்றதுடன், எதிர்காலத்தில் மிகுந்த ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

அதனை தொடந்து சபாநாயகரின் அறிவுறுத்தலுக்கமைய பொதுச் செயலாளர் திரு.தம்மிக தசநாயக்க , அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்திற்கமைய நாடாளுமன்ற பேரவையின் சட்ட கட்டமைப்பு மற்றும் அதன் நடைமுறைகளை விளக்கினார்.

அதன்போது எதிர்காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார். சுமார் ஒரு மணிநேரம் வரை நீடித்த கலந்துரையாடலில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற பேரவையின் உறுப்பினர்கள் இடையே உடன்பாடு எட்டப்பட்டது.

குறித்த சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரின் பிரதிநிதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சி தலைவரின் பிரதிநிதி கபீர் ஹாசிம், நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக தசநாயக்க மற்றும் பிரதி பொதுச் செயலாளர் திரு.நீல் இத்தவெல உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்ற பேரவை எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.

Related Articles

Latest Articles