நாடு நெருக்கடியில், அரசு என்ன செய்ய போகின்றது? 14 மூளைகளை பயன்படுத்தியேனும் பதில் சொல்லவும்!

“ தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. ஆடைத் தொழிற்சாலை இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை.

இந்த பிரச்சினைளை நிவர்த்தி செய்ய உரிய திட்டம் இன்றி அரசாங்கம் தொடர்ந்தும் வௌிநாடுகளிடம் கடன் பெற வரிசையில் நிற்கப் போகிறதா?
அல்லது நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போகிறதா?

இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் 7 மூளைகளை அல்ல 14 மூளைகளை பயன்படுத்தியேனும் அறிவுபூர்மாக பதில் சொல்ல வேண்டும். “

இவ்வாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நமது நாடு முதலில் இனக் கலவரத்தால் ஸ்தம்பிதம் அடைந்தது, பின் யுத்தத்தால் ஸ்தம்பிதம் அடைந்தது, அடுத்து சுனாமி பேரழிவால் ஸ்தம்பிதம் அடைந்தது, அதனை தொடர்ந்து ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலால் ஸ்தம்பிதம் அடைந்தது, அடுத்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஸ்தம்பிதம் அடைந்தது இந்த வரிசையில் இன்று எரிபொருள் தட்டுப்பாட்டினால் நமது நாடு ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளதால் மின்சாரத்தை முறையாக வழங்க முடியவில்லை. உற்பத்தி தொழிற்சாலைகளை சரியாக இயக்க முடியவில்லை. சுற்றுலாத்துறையை முன்னேற்ற முடியவில்லை. வியாபார நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்னர் மின்வெட்டு அமுல்படுத்தும் காலத்தில் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் இன்று எரிபொருள் இல்லாத காரணத்தால் ஜெனரேட்டர்களையும் இயக்க முடியவில்லை.

விவசாயிகள், மின்சாரம் இன்றி எரிபொருள் இன்றி தமது இயந்திரங்களை இயக்கி செயற்பட முடியாத நிலையில் உள்ளனர். மீனவர்கள் கடலுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிறு கைத்தொழில் செய்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி எரிபொருள் தட்டுப்பாடு அனைத்து தரப்பினரையும் கடுமையாக பாதித்து இறுதியில் விடிய விடிய நாட்டு மக்களை வீதியில் வரிசையாக நிற்க வைத்துள்ளது.

எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, கொழும்பை சூழ்ந்து 1500 சிற்றுண்டிச்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1000த்திற்கும் மேற்பட்ட பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாட்டில் சமையல் எரிவாயு விட்டு மீண்டும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கு மக்கள் வரிசையில் நிற்பது போல தற்போது சமையல் எரிவாயு விற்கும் மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.

பல சமையல் எரிவாயு முகவர்களுக்கு எரிவாயு விநியோகிக்கப்படவில்லை. எரிவாயு இறக்குமதி யிலும் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமையல் எரிவாயு இன்று கடையில் உணவு வாங்கச் சென்றால் அங்கும் சமையல் எரிவாயு என்று உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

உண்மையில் நாட்டு மக்கள் வேறு எந்த அரசாங்கத்திற்கும் இப்படி ஒரு கஷ்ட நிலையை அனுபவித்தது கிடையாது.

இந்நிலையில் உலக சந்தையில் மசகு எண்ணெய் 130 டொலருக்கு அதிகரித்துள்ளது. அத்துடன் இலங்கை மத்திய வங்கி இதுவரை இறுக்கிப் பிடித்து முடக்கி வைத்திருந்த டொலரின் ரூபா பெறுமதியை 230 ரூபாவிற்கு அதிகரித்துள்ளது.

அதனால் நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை பாரிய அளவு உயரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே மத்திய வங்கி இதற்கான கோரிக்கையை நிதி அமைச்சிடம் முன்வைத்துள்ளது. அதனை தொடர்ந்து மின் கட்டணம், நீர் கட்டணம் மாத்திரமன்றி அத்தியாவசிய பொருட்களின் விலையும் மேலும் அதிகரிக்கும்.

இந்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பின்வரும் விடயங்களை செய்வதற்கு அரசாங்கம் தயாரா என்று நாட்டு மக்களுக்கு கூற வேண்டும்.

முதலில் 1 பில்லியன் கடன் பெற வேண்டுமாயின் கடனை திருப்பிச் செலுத்தும் முறை குறித்து இந்தியாவிற்கு அறிக்கை சமர்பிக்க அரசாங்கம் தயாரா?

சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் அரசாங்கம் எப்படி இந்த கடன்களை திருப்பிச் செலுத்தும்?

ஜனவரி இறுதியில் வெறும் 800 மில்லியன் டொலர் கையிருப்பில் உள்ளது. அடுத்து செலுத்த வேண்டிய கடன் தொகை 2 பில்லியன் அமெரிக்க டொலர். தற்போது பெறப்பட்டுள்ள கடன்களில் இவ்வருடம் மாத்திரம் 6.9 பில்லியன் அமெரிக்க டொலர் திருப்பிச் செலுத்த வேண்டும். இந்த கடன்களை செலுத்தி அரசாங்கம் இவ்வாறு மீண்டு வரத் திட்டமிட்டுள்ளது?

பொதுக் கடன் அதிகரிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி, எதிர்வரும் நிதித் தேவை போன்றவற்றில் இலங்கை மிகவும் பின்தங்கி இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதில் இருந்து மீண்டு வருவதற்கு அரசாங்கத்திடம் உள்ள பொருளாதார பொறிமுறை திட்டம் என்ன?

மொத்த உள்நாட்டு உற்பத்தில் 3.6 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மின்வெட்டு, பெற்றோல், டீசல் தட்டுப்பாடு இதில் பெரிதும் தாக்கம் செலுத்தியுள்ளது.

தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. ஆடைத் தொழிற்சாலை இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை.

இந்த பிரச்சினைளை நிவர்த்தி செய்ய உரிய திட்டம் இன்றி அரசாங்கம் தொடர்ந்தும் வௌிநாடுகளிடம் கடன் பெற வரிசையில் நிற்கப் போகிறதா?

அல்லது நீண்ட கால பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லப் போகிறதா?

இந்த கேள்விகளுக்கு அரசாங்கம் 7 மூளைகளை அல்ல 14 மூளைகளை பயன்படுத்தியேனும் அறிவுபூர்மாக பதில் சொல்ல வேண்டும்.

அதனை விடுத்து உள்வீட்டு பிரச்சினைக்கு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்வதனாளோ.. புதிய அமைச்சர்களை நியமிப்பதாலோ அல்லது கட்சி அலுவலகங்களுக்கு குண்டர்களை அனுப்பி முட்டை அடிப்பதாலோ நாட்டில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

நாட்டில் இன்று ஜனநாயகம் இல்லை. கருத்து சுதந்திரம் இல்லை. ஊடக அடக்குறை அதிகரித்துள்ளது. சிவில் செயற்பாட்டாளர்களின் குரல் நசுக்கப்படுகிறது.

உள்நாட்டில் நீதி வேண்டி நிற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை.

அதனால் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சர்வதேசத்தை நாடியுள்ளார்.

இதனால் நாட்டுக்கு நடக்கப் போகும் அவப்பெயர் மற்றும் சர்வதேச அளவிலான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.

ஞாயிறு தாக்குதல் அரசியல் சூழ்ச்சி என்று பேராயர் கூறியுள்ளார்.

அது உண்மை என்றால் இந்த அரசியல் சூழ்ச்சியின் சூத்திரதாரி யார்?

குண்டுத் தாக்குதல் நடத்தி தற்கொலை செய்து கொண்டவர்களைப் பற்றி பேசிப் பயனில்லை.

ஆனால் அந்த தாக்குதல் நடத்த தூண்டுதலாக இருந்த பிரதான சூத்திரதாரி யார்?

Related Articles

Latest Articles