நாட்டை கடந்த காலங்களில் நாசமாக்கியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்ககூடாது. அதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
“ நாட்டில் தற்போதுள்ள எதிரணிகளின் கூட்டணியானது கள்வர்களின் ஒன்றிணைவாகும். அதனால்தான் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் மற்றையவர்கள் குழப்புகின்றனர்.
நாட்டில் முன்னர் இருந்த பழைய அரசியலை முன்னெடுப்பதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. இதற்கு மக்கள் இடமளிக்க கூடாது. மக்களுக்காக அல்ல தமக்காகவே அந்த தரப்புகள் அரசியல் நடத்துகின்றன.
இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதேபோல நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” என்றார் பொன்சேகா எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
