நாட்டில் கடந்த 13 ஆம் திகதி இரவு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தொடர் பயணத்தடை நாளை காலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அதன்பின்னர் தேசிய அடையாள அட்டை நடைமுறை அமுலுக்கு வரும். அத்துடன், இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (17) முதல் மே 31 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையிலேயே பொது மக்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியும்.
அத்தியாவசிய சேவையை முன்னெடுப்பவர்கள், தொழிலுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்நடைமுறை பொருந்தாது. பொருட்கள் கொள்வனவு உட்பட இதர விடயங்களுக்காக வருபவர்களுக்கே பொருந்தும்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கம் ஒன்றை எண்ணாக இருந்தால் (1,3,5,7,9) ஒன்றை இலக்க நாளில் வெளியே செல்லாம். அதாவது நாளை செல்லாம். இரட்டை இலக்க நாளாக இருந்தால் (2,4,6,8) இரட்டை இலக்க நாளிலும் வெளியே செல்லாம். 0 யமும் இரட்டை எண்ணாகவே கருதப்படும்.
நாளை முதல் அமுலில் உள்ள மேலும் சில நடைமுறைகள்…..
திருமண நிகழ்வுகளை நடத்த முடியாது. பதிவுத் திருமணம் செய்வதாக இருந்தால் பதிவாளர், சாட்சியாளர்கள் உட்பட 15 பேர் மட்டுமே பங்கேற்கமுடியும். வெளியாட்களை அழைக்க முடியாது.
கொவிட் – 19 அல்லாத மரணங்கள் இடம்பெற்றால் இறுதிக்கிரியைகள் 24 மணிநேரத்துக்குள் நடைபெறவேண்டும். 15 பேர் மட்டுமே பங்கேற்க முடியும்.
பொதுப்போக்குவரத்து சேவையில் ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைவாக பயணிகளுக்கு அனுமதி.
வாடகை வாகனங்களில் சாரதியுடன் இரண்டு பேர் மாத்திரமே பயணிக்க முடியும்.
அமைச்சின் செயலாளரின் சுற்றுநிரூபத்திற்கு அமைவாகவே அரச நிறுவனங்களில் செயற்பாடு.
தனியார் நிறுவனங்களில் குறைந்தபட்ச ஊழியர்கள் மற்றும் வீட்டிலிருந்து கடமையாற்றும் வசதிகளுடன் பணிகளை முன்னெடுக்கலாம்.
அவசியக் கூட்டங்கள் 10 பேருடன் மட்டுப்படுத்தப்பட வேண்டும். செயலமர்வுகள், மாநாடுகளுக்கு அனுமதியில்லை.
சில்லறைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள், கடைத் தொகுதிகள், சந்தைகள், பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் வங்கிகளின் இட வசதியில் 25 வீதமானோருக்கே அனுமதி.
பேக்கரி, வீதியோரக் கடைகள், அழகுசாதன நிலையங்களில் இட வசதியின் பிரகாரம் 25 வீதமானோருக்கே உட்பிரவேச அனுமதி.
பராமரிப்பு நிலையங்கள், பாலர் வகுப்புகள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் வகுப்புகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளன.
வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள், இரட்டைப் பிரஜாவுரிமையுடையோர், வௌிநாட்டவர்கள், இராஜதந்திரிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியது கட்டாயம்.
வெளியே வருபவர்கள் அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரத்தை கைவசம் வைத்திருக்க வேண்டும். தேசிய அடையாள அட்டை இல்லாதபட்சத்திலேயே கடவுச்சீட்டு, சாரதி அனுமதி பத்திரங்களை பயன்படுத்த முடியும்.
அதேவேளை, கர்ப்பிணி பெண்கள், இருதய நோயாளிகள் உட்பட அத்தியாவசிய தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு செல்பவர்களுக்கும் இந்நடைமுறை பொருந்தாது.