” எவ்வித தொழில் நிபந்தனைகளும் இன்றியே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும். அத்துடன், தொழிலாளர்களுக்கான சலுகைகளும் நிறுத்தப்படக்கூடாது.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சம்பள நிர்ணய சபை ஊடாக, சம்பள உயர்வு சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெறுவது வரவேற்கத்தக்கது. அதற்கு நாம் எதிர்ப்பை வெளியிடவில்லை. ஆனால் ஆயிரம் ரூபா என்ற தொகையைக் காண்பித்துவிட்டு, தொழிலாளர்கள்மீது தொழில் சுமைகள் திணிக்கப்படக்கூடாது. அவர்களுக்கான சலுகைகள் தொடரவேண்டும்.
வேலை நாட்கள் குறைக்கப்படக்கூடாது என்பதுடன், எடுக்கப்படவேண்டிய கொழுந்தின் அளவும் அதிகரிக்கப்படக்கூடாது.” – என்றார்.
