‘நிழல் அமைச்சராகவே செயற்படுவேன்’ – அரவிந்தகுமார் சபதம்

மலையக தமிழ்ப் பாடசாலைகளை மேம்படுத்தும் பொறுப்பினை வழங்குகின்றேனென்று ஜனாதிபதி என்னிடம் கூறியே கல்வி இராஜாங்க அமைச்சின் நியமனப் பத்திரத்தை என்னிடம் வழங்கினார். ஜனாதிபதியின் அந் நம்பிக்கைக்கமைய எனது முழுக்கவனத்தையும் செலுத்துவேன் – என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்த குமார் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கல்வி இராஜாங்க அமைச்சின் நியமனப்பத்திரம் எனது கைக்கு கிடைக்கும் வரை இவ் அமைச்சுதான் எனக்கு கிடைக்குமென்று எனக்குத் தெரியாது. சிறிதும் எதிர்பார்க்காத வகையிலேயே கல்வி இராஜாங்க அமைச்சு எனக்கு கிடைத்திருக்கின்றது. நியமனப்பத்திரத்தை என்னிடம் ஜனாதிபதி வழங்கும் போது அவர் என்னிடம் கூறியதற்கமைய எனக்கு பெரும் சுமை இருப்பதை அறிவேன்.

எம்மவர்கள் இந்நாட்டில் கால் பதித்து இருநூறு வருடங்களை அண்மித்துவிட்டது. மலையகத் தமிழ்க் கல்வி வளர்ச்சி தேசிய நிலைக்கு வந்து ஐம்பது வருடங்களாகின்றது. ஆனாலும் பல தசாப்பதங்களாக மலையகக் கல்வி வீணடிக்கப்பட்டுவிட்டது.

மலையக்திலும் பல்வேறு வகையில் உயர்பதவிகளில் எம்மவர்கள் இருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் எமது மக்களின் விகிதாசாரங்களுக்கமைய மேற்படி உயர் பதவிகள் போதுமானதாக இல்லை. ஆகவே எனது இராஜாங்க அமைச்சர் பதவி ‘நிழல்அமைச்சரவை’ அந்தஸ்துள்ள அமைச்சாகவே கருதி கங்கணம் கட்டிச் செயல்படவுள்ளேன். கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பை சரிவரச் செய்வேன்.

கல்வி இராஜாங்க அமைச்சிற்கு ஒதுக்கப்படும் நிதியை மட்டும் நம்பி நான் செயற்படமாட்டேன். நிதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு பலவகைகளில் வாய்ப்புக்களும் வழிகளும் உண்டு. வெளிநாட்டு தூதரகங்கள், நலன்புரி அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என்ற வகையில் உள்ளன. எமது நம்பகத்தன்மையை வைத்து கோடிக்கணக்கான ரூபாய்களை பெற்றுக் கொள்வதற்கு தயாராகிவிட்டேன். இந்நிதிகளை கல்வி அபிவிருத்திக்கு முழுமையாகப் பயன்படுத்துவேன். அத்துடன் பெருந்தோட்ட பாதையமைப்பு, உட்கட்டமைப்பு வசதிகளையும் ஏதோ ஒரு வழியில் மேற்கொள்வேன். என்றார்.

Related Articles

Latest Articles