பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது: மொட்டு கட்சி கொதிப்பு!

” பிரபாகரனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் பதிவுகளை பதிவிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனை கடவுள் என விளித்து மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்களுக்கு எதிராக இன்னும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சீறிப்பாய்ந்துள்ளது.

கொழும்பிலுள்ள அக்கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,

” மக்கள் மத்தியில் குரோதத்தை விதைப்பதற்கு ஜே.வி.பியினர் சமூகவலைத்தளங்களையே பயன்படுத்தினர். போலியான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பி அரசியல்வாதிகளின் வீடுகளை தீக்கிரையாக்குவதற்கு வழிவகுத்தனர்.
ஆனால் தற்போது ஆட்சி அதிகாரம் அக்கட்சியினருக்கு கிடைத்துள்ள நிலையில், சமூக ஊடக செயற்பாட்டாளர்களை ஒடுக்கும் செயல் முன்னெடுக்கப்படுகின்றது. சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவதை நாம் கண்டிக்கின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் எனக் கூறிவந்த ஜே.வி.பியினர் அந்த சட்டத்தின்கீழ்தான் கைதுகளை செய்துள்ளனர்.

வடக்கு, கிழக்கில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் வெளியாகின. நிகழ்வு நடக்கவில்லை எனக் கூறமுடியாது. அந்நிகழ்வு பற்றி கதைத்த சமூக ஊடக செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சமூக ஊடக செயற்பாட்டாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையாகும்.

பிரபாகரனுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் இடப்படும் பதிவுகளுக்கு எதிராக பொலிஸார் செயற்பட்டுள்ளனர். ஆனால் பிரபாகரனை கடவுள் என விளித்து, மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமை கவலையளிக்கின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles