பெருந்தோட்ட காணிகளை அரசாங்க பொறுப்பேற்க கொள்கை ரீதியில் இணக்கம்

பெருந்தோட்ட நிறுவனங்களுடனான 1992ஆம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்து பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியான இணக்கம் வெளியிடப்பட்டது.

பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண இந்த இணக்கத்தை வெளியிட்ட நிலையில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவும் தமது கூடுதல் இணக்கத்தை வெளியிட்டார்.

நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்விக்கான தேசிய கொள்கையில் பெருந்தோட்ட மக்கள் உள்வாங்கப்படாமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இன்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் இதனை நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இந்த விடயத்தை முன்வைத்தார்.

இலங்கை பிரஜைகளாக உள்ள பெருந்தோட்ட மக்கள் சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற விடயங்களுக்காக பெருந்தோட்ட நிறுவனங்களிடம் செல்ல வேண்டுமா?

இலங்கையில் 15 லட்சம் பெருந்தோட்ட மக்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் நாட்டின் 25 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில்; வசிக்கின்றனர்.

இந்த 10 மாவட்டங்களையும் 3 பெருந்தோட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களே நிர்வகிக்கின்றனர்.

எனவே பெருந்தோட்டம் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடும் போது பெருந்தோட்ட மக்களையும் அவர்களிடம் ஒப்படைத்து விட்டனரா? என்ற கேள்வி எழுகிறது.

ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட சகல தேர்தல்கள் மற்றும் ஏனைய விடயங்களில் முன்னிலையாகி பங்களிக்கும் பெருந்தோட்ட மக்கள், கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான தேசிய கொள்கையில் உள்வாங்கப்படவில்லை.

பெருந்தோட்ட மக்களுக்கான மின்சாரத்தை பெறுவதற்கு தோட்ட முகாமையாளரின் கடிதம் வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது.

மலசலக்கூடும் ஒன்றை அமைப்பதற்குக் கூட பெருந்தோட்ட நிறுவனத்தின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய நிதியுதவின் கீழ் பெருந்தோட்ட மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் போது பெருந்தோட்ட நிறுவனங்கள், இடங்களை வழங்க முடியாது என்று கூறும் நிலை உள்ளது

பெருந்தோட்ட மக்களுக்கு இன பேதம் இல்லை இந்தநிலையில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதியாகும் போது பெருந்தோட்ட மக்கள் இலங்கைக்கு வந்து 200 வருடங்களாகின்ற நிலையிலாவது அவர்களுக்கு தேசிய கொள்கையை வழங்குமாறு வலியுறுத்துவதாக வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்தார்.

இந்த நாடாளுமன்றில் அனைவரும் இணைந்து பெருந்தோட்ட மக்களை தேசிய கொள்கைக்குள் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1992ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய பெருந்தோட்ட மக்களையும் தோட்ட நிறுவனங்களுக்கு ஒப்படைத்து விட்டனர்.

ஜனாதிபதியால் உணவு பாதுகாப்பு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும் பெருந்தோட்ட நிலங்கள் தனியாரிடம் உள்ளமையால் எவ்வாறு அதனை ஏற்படுத்த முடியும்.

9 ஆயிரம் ஹெக்டயர் காணி கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

கடந்த காலங்களில் பெருந்தோட்ட பகுதிகளில் ஒரு தேயிலையை கூட அகற்றுவதற்கு அனுமதிக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறியிருந்த போதிலும் தற்போது பெருந்தோட்ட பகுதிகள் காடுகளாக மாறியுள்ளன.

25 சதவீதமாக உள்ள சிறுதோட்ட உரிமையாளர்கள் 75 சதவீத உற்பத்தியை மேற்கொள்கின்றனர்.

எனினும் 75 சதவீத நிலப்பரப்பை கொண்ட பெருந்தோட்ட பகுதிகளில் 24 சதவீதமே தேயிலை உற்பத்தி இடம்பெறுகிறது.

எனவே, குறித்த உடன்படிக்கையில் இருந்து பெருந்தோட்ட மக்களை நீக்கி அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.
அடிப்படை வசதிகளுடன் இலங்கையர்களாக வாழ்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும்.

பெருந்தோட்ட நிறுவனங்களின் பின்னால் செல்ல முடியாது.

நாட்டின் தேசிய கொள்கைகளில் பெருந்தோட்ட மக்களும் உள்வாங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அவருக்கு பதிலளித்து கருத்துரைத்த விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷின் கருத்தை தாம் முழுமையாக ஏற்றுக் கொள்வதாக குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸவின் காலப்பகுதியில் பெருந்தோட்ட நிலங்கள் மிகவும் மோசமான உடன்படிக்கையின் கீழ் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய அரசாங்கத்தின் பொது விடயங்களுக்கும் பெருந்தோட்ட மக்களுக்கும் காணியை பெற்றுக் கொள்ளும் போது தோட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 70 ஆயிரம் ஹெக்டயர் தரிசு நிலங்கள் பெருந்தோட்ட நிறுவனங்களிடம் உள்ளன.

அங்கு தேயிலை, இறப்பர் உள்ளிட்ட பயிர்ச் செய்கையும் இடம்பெறுவதில்லை.
பெருந்தோட்ட மக்களின் கோரிக்கை நியாயமான விடயமாகும்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்; ஆட்சியின் போது பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கான சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன

எனவே, மிகவும் மோசமான உடன்படிக்கையின் கீழ் வழங்கப்பட்ட பெருந்தோட்ட நிலங்களை மீள பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சபாநாயகரிடம் கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல், இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரின் நிலைப்பாடு என்னவென வினவினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நிலங்கள் மீண்டும் கையேற்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தாமும் இருப்பதாக குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles