” எதிர்வரும் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள அடையாள வேலை நிறுத்த போராட்டமானது, தொழிலாளர்களின் சம்பள உயர்விற்காக அழுத்தம் தெரிவிப்பதற்கான வேலை நிறுத்த போராட்டமே தவிர, அரசியல் இலாபத்திற்கான போராட்டம் அல்ல என்பதை சிவநேசன் விளங்கிக்கொள்ள வேண்டும்.”
இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி சம்பள நிர்ணய சபை ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பள தொகையை ஆயிரம் ரூபாயாக நிர்ணயிப்பதற்கான பேச்சுவார்த்தை இடம்பெற உள்ள நிலையில் அப்பேச்சி வார்த்தைக்கு வலு சேர்க்கும் வகையிலும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு அழுத்தம் தெரிவிக்கும் வகையிலுமே வேலைநிறுத்த போராட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இப்போராட்டம் தொடர்பாக எதிர் தரப்பினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
விசேடமாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் சில உறுப்பினர்களே இவ்வாறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இவர்களின் விமர்சனம் அரசியல் இலாபத்திற்காக வெளியிடப்படுகின்றது. தொழிலாளர்களையும் தொழிற்சங்கத்தையும் காட்டி கொடுப்பதற்காகவே தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் அறிக்கை வெளியிடுகின்றார்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தொழிற்சங்கமே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.மேலும் இரண்டு தொழிற்சங்கங்கள் உள்ளன. இவ்வாறான நிலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மாத்திரம் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெறியேற வேண்டும் என கோசமிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியினலே.
அத்தோடு காலம் காலமாக கூட்டு ஒப்பந்த பேச்சிவார்த்தை இடம்பெறும் போது முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக தமது அழுத்தத்தை மலையக பெருந்தோட்ட மக்கள் தெரிவித்தே வந்துள்ளனர்.பல்வேறு போராட்டங்களையும் வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டே சம்பள அதிகரிப்பை பெற்றுள்ளார்கள்.
வெறுமனே பேச்சிவார்ததை ஊடாக மாத்திரம் சம்பள அதிகரிப்பை பெற்றுவிட முடியாது, வெளியில் இருந்து வழங்கப்படும் ஆதவுகள்,அழுத்தங்கள் ஊடாகவே சம்பள பேச்சிவார்த்தையின் வெற்றியை உறுதிப்படுத்த முடியும்.மாறாக அரசியல் வங்குரோத்து காரணமாக தொழிற்சங்கங்களை காட்டி கொடுப்பதால் சம்பள அதிகரிப்பை பெற்றிட முடியாது என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் சிவநேசன் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.
தற்போது கூட்டு ஒப்பந்தமானது காலாவதியாகியுள்ள நிலையில் அடுத்த கூட்டு ஒப்பந்தத்திற்கான பேச்சி வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றது. அக்கூட்டு ஒப்பந்தத்தின் ஓர் சரத்தாகவே சம்பள அதிகரிப்பு பேச்சி வாரத்தை காணப்படுகின்றது.
எனவே முழுமையாக கூட்டு ஒப்பந்தத்தை எதிர்ப்பது சிலரின் அறியாமையை வெளிப்படுத்துகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுமாறு கோசமிடுவதும் தொழிலாளர்களை அடகு வைக்க கோருவதை போன்றதாகும்.எனவே எதிர்வரும் பெப்ரவரி 5ம் திகதி இடம்பெறவுள்ள அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அரசியல் சாயம் பூசி,சுயநல அரசியலுக்காக போராட்டத்தை காட்டிகொடுக்க முயற்சிக்க வேண்டாம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த அரசாங்கத்தின் முக்கிய பங்காளிகளாக இருந்த த.மு.கூ அப்போது அறிவித்த ஐம்பது ரூபாயை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியாமல் போனது,அப்போது அவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி இருந்தால் அது எமக்கு படிப்பினையாக கூட இருந்திருக்கும்.
ஆனால் அப்படி செய்யவில்லை,ஐம்பது ரூபாய் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறிய அரசாங்கத்திற்கே ஆதரவு வழங்கியது தொழிலாளர் தேசிய சங்கம். அவ்வாற் இருக்கையில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிச்சயமாக ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற முனைப்போடு செயற்படும் தற்போதைய அரசாங்கத்தில் இருந்து இ.தொ.கா வெளியேற வேண்டிய அவசியமும் இல்லை.