“போரால் வடக்கில் உயிரிழந்தவர்களையும் நினைவுகூரவேண்டும். அவர்களும் இலங்கையர்கள்தான். இவ்வாறு நினைவுகூருவதில் எவ்வித தவறும் கிடையாது” – என்று விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
” எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இராணுவத்தினரைப் பற்றி பேசுகின்றார்…, புலிகள் அமைப்புக்கு ஆயுதம் வழங்கியது யார்? எனவே, இராணுவம் பற்றி கதைப்பதற்கு சஜித்துக்கு தார்மீக உரிமை உள்ளதா?” – எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
படையினர் நினைவுநாள் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்றார். அங்கு அவர் ஒரு வசனம்கூட இனவாதம் பேசவில்லை. இதுதான் எமது கொள்கை. நீதி, நியாயம் மற்றும் நேர்மைக்காக குரல் எழுப்பிய தெற்கு மற்றும் வடக்கு இளைஞர்களும் வீரர்கள்தான். தெற்கில் இளைஞர்கள் சாகும்போது மட்டும் அல்ல வடக்கில் இளைஞர்கள் சாகும்போதும் எமக்கு கண்ணீர் வந்தது.
அதேபோல போர் காரணமாக பலர் உயிரிழந்தனர். அவர்களை நாம் நினைவுகூரக்கூடாதா? அவ்வாறு நினைவுகூர வேண்டும். இங்கும் நினைவுகூர முடியும். வடக்கிலும் இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் நினைவுகூர வேண்டும். அதில் எவ்வித தவறு கிடையாது எனவும் அமைச்சர் கிரிஷாந்த அபேசேன குறிப்பிட்டார்.
அவர்களும் இலங்கையர்கள்தான். ஏதேனும் காரணத்துக்காக போர் ஏற்பட்டிருக்கலாம். இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. காணாமல்போன சம்பவங்கள் இடம்பெற்றன. ஆக நினைவுகூருவதில் என்ன தவறு உள்ளது? தேசிய மக்கள் சக்தியென்பது இனவாதக் கட்சி கிடையாது. எமது இதயங்களில் இனவாதம் இல்லை.
வடக்கு, கிழக்கில் பலவந்தமாக குடியேற்றங்களை ஏற்படுத்தியது யார்? யாழ். நூலக்கத்தை எரித்தது யார்? 83 கலவரத்தை ஏற்படுத்தியது யார்? ஆனால் சில கட்சிகள் அவர்களுக்கு சோரம்போவது கவலையளிக்கின்றது.
வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே சட்டம், சலுகைதான் இருக்க வேண்டும்.” – என அமைச்சர் கிரிஷாந்த அபேசேன மேலும் குறிப்பிட்டார்.