போர்க்குற்றவாளிகளை எனது அரசு தண்டிக்காது!

” இலங்கையின் 26 வருடகால உள்நாட்டுப் போரின்போது போர்க்குற்றச்சாட்டுகள், மனித உரிமை குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள எவரையும் எனது நிர்வாகம் தண்டிக்க முயலாது.”

– இவ்வாறு ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“2022 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியிலிருந்து அகற்றுவதற்குக் காரணமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு நானும் ஒரு வழிகாட்டியாக இருந்தேன்.

எனது நாட்டு மக்கள் மாற்றங்கள் குறித்து பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர். அவர்கள் மாற்றத்தை  விரும்புகின்றனர். நாங்கள் அந்த மாற்றத்தின் முகவர்கள். ஏனைய அனைத்து வேட்பாளர்களும் பழைய, தோல்வியடைந்த, பாரம்பரிய முறைமையின் முகவர்கள்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியை அகற்றுவதற்கு அப்பால் திட்டங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை. மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர்களாக அவர்கள் காணப்படவில்லை. இதன் காரணமாக மாற்றங்கள் குறித்த மக்களின் பெரும் விருப்பம் சாத்தியமாகவில்லை.

மக்கள் விரும்பும் மாற்றமாக எனது  நிர்வாகம் காணப்படும். மக்கள் ஊழல் அற்ற சமூகத்தில் சிறப்பான பொருளாதாரத்தை  எதிர்பார்க்கின்றார்கள்.

நாட்டின் வளங்களைத் தேசிய மயப்படுத்தும் கொள்கையை எனது கட்சி நீண்டகாலமாகக் கொண்டுள்ள போதிலும், நாங்கள் பொருளாதார சுதந்திரம், வெளிநாட்டு வர்த்தகம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்கின்றோம்.

பொதுமக்கள் மீதான சுமைகளைக் குறைப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து முன்னெடுப்போம்.

நாடு நிதி ரீதியாக வீழ்ச்சியடைந்து  காணபட்டதாலேயே நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையைச் செய்தோம் என்பதால் நாங்கள் அதிலிருந்து வெளியேற முடியாது. ஆனால், மாற்றீடுகள் இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்கும்போது மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

இலங்கையின் 26 வருட ஈவிரக்கமற்ற உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் – போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட எவரையும் எனது நிர்வாகம்  தண்டிக்க முயலாது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து எனது அரசு விசாரணைகளை மேற்கொள்ள முயலும்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு எனது அரசு முயலும்.

பொறுப்புக்கூறல் விடயம் பற்றி தெரிவிப்பதென்றால் பழிவாங்கும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது. எவரையும் குற்றஞ்சாட்டும் விதத்தில் அது இடம்பெறக்கூடாது. உண்மையைக் கண்டறியும் விதத்திலேயே அது முன்னெடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் கூட எவரும் தண்டிக்கப்பட வேண்டும் என விரும்பவில்லை. அவர்கள் என்ன நடந்தது என அறியவே விரும்புகின்றார்கள்.” – என்றார்.

நன்றி – முரசு

Related Articles

Latest Articles