“ நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, தேசியத்தோடு இணைந்து வரக்கூடிய ஏனைய தரப்பினரையும் இணைத்துக்கொண்டு எங்களுடைய மக்களின் விடுதலைக்காக புதிய விடுதலை பாரம்பரியத்தை முன்னெடுக்கவுள்ளோம்.”
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள எஸ். சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
“ எங்களுடைய பங்கு – பணி என்பது இனம் சார்ந்தது, தமிழ் தேசியத்தினுடைய இருப்பு சார்ந்தது, எங்களுடைய இனத்துக்கான அடிப்படை உரிமைகள் சார்ந்தது , அந்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒன்றிணைந்து பயணிப்போம்.” எனவும் அவர் கூறினார்.
“ என்னை தெரிவு செய்வதற்கு காரணமாக இருந்த இயற்கை என்னும் இறைவனுக்கும், எனக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அயராது உழைத்த, பொதுச் சபை உறுப்பினர்களின் மிகப் பெறுமதியான வாக்குகளால் தவைவராக தெரிவு செய்ததற்கு முதலில் எனது நன்றிகள்.
கட்சி தொடர்பில் இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிக அக்கறையுடன் செயற்பட முன்வரும் நிலை உருவாகியுள்ளது.
என்னுடன் போட்டியிட்ட நண்பர் எம்.சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோருடன் இணைந்து கட்சி செயற்பாட்டினை இன்னும் பல வழிகளில், எமது மக்களின் உரிமைக்காக தேசிய இருப்புக்காக , தேசியத்தின் ஒவ்வொரு அங்குலத்துக்காகவும் பொறுப்புடனுன் செயற்படுவோம்.” – எனவும் சிறிதரன் குறிப்பிட்டார்.










