மக்கள் உறங்கும்வேளை ஊரடங்கு எதற்கு?

“ மக்கள் உறங்கும்வேளையில்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த அரசு மடத்தனமான முடிவுகளையே எடுக்கின்றது. தனக்கு போதிய அனுபவம் இல்லாவிட்டால் முடியுமான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஜனாதிபதி பதவி விலக வேண்டும்.” – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று முற்பகல் அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இவ்வாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மிகவும் மோசமானதொரு காலகட்டத்திலேயே தற்போது இருக்கின்றோம். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ள அரசு, ஊடகங்கள் வாயிலாக வேறு விதத்தில் பிரச்சாரம் முன்னெடுக்கின்றது. உண்மை அதுவல்ல. மரண வீதத்தில் நாடு முன்னிலை வகிக்கின்றது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது.

இந்நிலையில் போலியான தகவல்களையும், தரவுகளையுமே அரசு வெளியிடுகின்றது. அவ்வாறு மோசடி செய்து மக்களை தவறாக வழிநடத்தாமல் உண்மை நிலைவரத்தை தெளிவுப்படுத்துமாறு அரசை வலியுறுத்துகின்றோம்.

அரச மருத்து அதிகாரி சங்கங்கள், பொது சுகாதார அதிகாரி சங்கம் மற்றும் சுகாதார துறைசார்ந்தோர் நாட்டை முடக்குமாறு வலியுறுத்துகின்றனர். இதனை செய்யாமல், துறைசார் நிபுணர்களின் பரிந்துரைகளை ஏற்காமல் தனது இயலாமையை மூடிமறைப்பதற்காகவே போலி தகவல்களை அரசு இவ்வாறு வெளியிட்டுவருகின்றது.

தடுப்பூசிகளை துரிதமாக பெறுமாறு அரசை நாம் வலியுறுத்துகையில் பாணியின் பின்னால் ஓடினர். பானையை ஆற்றில் போட்டு கூத்து காட்டினர். அரசு இவ்வாறு இழைத்த தவறுகளால் மக்கள் இன்று செத்து மடிகின்றனர். முதலாவது அலையின்போது நாட்டை மூடுமாறு வலியுறுத்தினோம். வேட்புமனு தாக்கல்வரை அரசு காத்திருந்தது. 2ஆவது அலை ஏற்பட்டபோது 20 ஐ நிறைவேற்றும்வரை மௌனம் காத்தது. தற்போது என்ன செய்யபோகின்றது என தெரியவில்லை.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தூங்கும்வேலையில் ஊரடங்கு பிறப்பிப்பதில் என்ன பயன்? இவ்வாறு ஊரடங்கு பிறப்பிப்பதும் ஒன்று, பிறப்பிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்.  எனவே, நாட்டை முடக்குமாறு அரசை வலியுறுத்துவோம். நமது உயிரை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.

ஜனாதிபதி போதிய அனுபவம் இல்லாவிட்டால், முடியுமான ஒருவருக்கு பொறுப்பை வழங்கிவிட்டு, பதவி விலக வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles