மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!

தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை தம்பக்கம் வளைத்துபோட்டு தமது தேவைக்கேற்ப அவனை பயன்படுத்த முற்படுவதற்கு பெயர் உதவி உதவி அல்ல. அது நயவஞ்சக வலையாகும்.

இன்றைய நவீன உலகில் வளர்முக நாடுகள் விவகாரத்தில் சீனா இத்தகையதொரு அணுகுமுறையையே கையாண்டுவருகின்றது. ஆபிரிக்காவில் உள்ள சில நாடுகள் சீனாவின் இந்த நயவஞ்சக வலைக்குள் சிக்கி, மீண்டெழ முடியாமல் தமது நாட்டு பொருளாதார மர்ம ஸ்தானங்களைக்கூட சீனாவுக்காக திறந்து விட்டுள்ளன என்பது பயங்கர நிலையாகும். அந்நாடுகளின் தற்போதைய நிலை என்பது இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கிய கதைபோல்தான் அமைந்துள்ளது.

அதுமட்டுமல்ல சொலமன் தீவுகள் உட்பட பசுபிக் வலயத்திலும் தனது வலையை விரித்தே வைத்துள்ளது சீனா. தெற்காசியாவில் இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இவ்விரு நாடுகளும் இன்று பொருளாதார நெருக்கடியில் திண்டாடிக்கொண்டிருப்பதற்கு சீனாவின் கடன் பொறியும் ஓர் காரணமாகும்.

உலகில் இன்று பலம்பொருந்திய பொருளாதார சக்திமிக்க நாடுகளுள் சீனாவும் ஒன்றாகும். அந்நாடு தமது பலத்தை ஏனைய நாடுகளை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு தாம் மென்மேலும் முன்னேறுவதற்காகவே பயன்படுத்திவருகின்றது. அடுத்தவன் எப்பாடுபட்டாலும் சரி, தமக்கு சோறுதான் முக்கியம் என்பதுபோல்தான் இதுவிடயத்தில் பீஜிங்கின் மனநிலை உள்ளது.

பூகோள அரசியல் போட்டிகளுக்கு மத்தியில் சீனாவின் இந்த சவாலை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்த நாடுகள், பல உபாயங்களைக்கையாண்டு வருகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து `ஆக்கஸ்’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. தென்கொரியா, ஜப்பான், நியூசிலாந்து ஆகிய நாடுகளையும் இக்கூட்டணியில் இணைத்துக்கொள்ள முற்படுகின்றன. ஜப்பான் தமது பாதுகாப்பு செலவீனங்களையும் அதிகரித்துள்ளது.

எனவே, இலங்கையில் ஆழமாக காலூன்றியுள்ள சீனாவின் பிரசன்னம் மற்றும் அதன் முதலீடுகள் தொடர்பில் இலங்கையும் விழிப்பாகவே இருக்க வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது. சீனாவிடமிருந்து அதிக வட்டிக்கு கடன்பெற்று இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்கள்மூலம் இலங்கைக்கு உரிய பலன் கிட்டியுள்ளதா என்பது மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாகும். அம்பாந்தோட்டை முறைமுக அபிவிருத்தி என்பது இதற்கு சிறந்த சான்றாகும்.

இலங்கை பாரிய வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கியிருந்த காலகட்டத்திலேயே மத்தல விமான நிலையமும், அம்பாந்தோட்டை துறைமுகமும் மேம்படுத்தப்பட்டன. தெற்கில் எவ்விதத் திட்டங்களும் இன்றி பல மில்லியன் டொலர்கள் செலவில் விமானங்களே வராத விமான நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டது. அத்துடன் இலங்கையில் பல இயற்கை துறைமுகங்கள் இருக்கும் நிலையில், தமது அரசியல் இருப்புக்காகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்தும் திட்டத்தையும், மத்தல விமான நிலையத் திட்டத்தையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னெடுத்தார். இத்திட்டத்துக்கு உள்நாட்டில் எதிர்ப்புகள் வலுத்தாலும் அவர் பின்வாங்கவில்லை.

இலங்கையை மெல்லென கடன் பொறிக்குள் சிக்கவைத்துக்கொண்டிருந்த சீனாவும், முந்தியடித்துக்கொண்டு கடன் உதவிகளை அள்ளி வழங்கியது. பூகோள அரசியல் இருப்புக்காகவுமே சீனா உதவி என்ற போர்வையில் தனது கைங்கரியத்தை கையாண்டது.

இன்று துறைமுகம் அமைத்து என்ன பயன்? எதிர்க்கட்சிகளின் மொழியில் சொல்வதாக இருந்தால் அம்பாந்தோட்டை துறைமுகமும், மத்தல விமான நிலையமும் வெள்ளை யானைகளாகும்.

துறைமுக மேம்பாட்டுக்காகவும், மத்தல விமான நிலையத்திற்காகவும் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இலங்கை திண்டாடியது. நல்லாட்சி காலத்தில் சீனாவுடன் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான 99 வருட ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. இந்த துறைமுக பகுதிக்கு சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்துசென்ற விவகாரமும் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தியது. துறைமுகத்துக்குள் சீன படைகள் வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடாதபோதிலும், அங்கு தனது காலை சீனா ஆழமாக ஊன்றியுள்ளது. இடியப்ப சிக்கலுக்குள் சிக்க வைக்கும் வகையில் அபிவித்தி திட்டங்களை முன்னெடுப்பதுதான் அபிவிருத்தியா? 2015 இல் மஹிந்த மண் கவ்வுவதற்கு அம்பாந்தோட்டை துறைமுக விவகாரமும் ஓர் காரணமாகும்.

மத்தள விமான நிலையத்தின் கதியும் அதுதான். இலாபம் ஈட்டும் நிறுவனமாக குறித்த விமான நிலையம் இன்னும் மாறவில்லை. ஏதோ கட்டிவிட்டோம், காப்பாற்ற வேண்டும் என்ற நிலையிலேயே மத்தள விமான நிலையம் நிர்வகிக்கப்பட்டுவருகின்றது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது, கடன் தள்ளுபடியையோ அல்லது இரத்தையோ சீனா தாமாக முன்வந்து செய்யவில்லை. மாறாக கடன் மறுசீரமைப்புக்கூட இழுத்தடிப்புக்கு மத்தியிலேயே இணக்கம் தெரிவிக்கப்பட்டது. ஆபத்தான நேரத்தில்தான் உண்மையான நண்பன் யாரென்பதை அறியலாம். இலங்கையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி ஆசிய பிராந்தியத்தில் இலங்கையின் உண்மையான நட்பு நாடு எது என்பதை புடம்போட்டு காட்டியுள்ளது.

Related Articles

Latest Articles