“ மத்திய மாகாண உதவி ஆசிரியர்களுக்குரிய நியமனம் எதிர்வரும் 19 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இன்று (14.03.2023) என்னிடம் உறுதிப்படுத்தினார்.” – என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திகுழுக்கூட்டம் இன்று 14.03.2024 நுவரெலியா மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மத்திய மாகாண உதவி ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு அவர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தான் கடந்த வாரம் பாராளுமன்றத்திலும் குரல் எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டினேன் எனவும் ராதாகிருஷ்ணன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், இந்த நியமனங்களை எதிர்வரும் 19 ஆம் திகதி வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்;பட்டிருப்பதாகவும் அதனை நிச்சயமாக குறித்த திகதியில் வழங்க முடியும் என்பதையும் தெரிவித்தார்.
“ 2016 ஆம் ஆண்டு உதவி ஆசிரியர்களாக நியமனம் பெற்று 2019 ஆம் ஆண்டு அவர்கள் தங்களுடைய தகுதியை ஆசிரியர்களாக பூர்த்தி செய்திருந்த போதிலும் அவர்களுக்கான நிரந்தர நியமனம் பல காரணங்களால் கடந்த 5 வருடங்களாக வழங்கப்படாமல் இருக்கின்றது.
இன்றைய பொருளாதார நிலைமையில் ஆசிரிய உதவியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியிலேயே தங்களுடைய தொழிலையும் வாழ்வாதாரத்தையும் முன்னெடுத்து வருகின்றார்கள். எனவே அவர்களுடைய நியமனத்தை உடனடியாக வழங்கி அவர்கள் தங்களுடைய தொழிலை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் இராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.