மலையக பகுதிகளில் உள்ள ‘டைப் 3’ ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 1000 மெட்ரிக் தொன் அரிசி, தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (இந்திய தூதரக விவகாரம்) ஊடாக , பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இதொகாவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.
இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஜீவன் தொண்டமான் தலைமையில் கடந்த மார்ச் 17 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்கியுள்ளது.
இன்று வழங்கப்பட்டுள்ள அரிசி, மலையகத்தில் தெரிவுசெய்யப்பட்ட டைப் 3 ஆரம்ப பிரிவு பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளது.புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கருத்திற்கொண்டு, மாணவர்களின் இடைவிலகளை தடுப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் நோக்குடனே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷவரன், தாய்வான் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் இந்திய தூதரக பணிப்பாளர் நாயகம் ரிச்சட் சீ.எல். சென், பிரதி பணிப்பாளர் நாயகம் சூ-ஹெசீன் செங், ‘Good Neighbors International’ தாய்வான் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் கோ ஜெங் யாங் மற்றும் அதிகாரிகள், அமைச்சின் செயலாளர் எஸ்.சமரதிவாகர, அமைச்சின் அதிகாரிகள், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
