பாடசாலை செய்திகள் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தொலை காணொளி தொழில்நுடபம் ஊடாக கொவிட் தடுப்பு செயலணி கூட்டம் நேற்று நடைபெற்றது. இதன்போது, பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், அவ்வாறே மேலும் பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும் கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரம் 7 முதல் தரம் 13 வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதில் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக 12 வயது முதல் 18 வயது வரையான பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
கொவிட்-19 தொற்றினால் ஒன்றரை வருட காலமாக பாடசாலைகள் அவ்வப்போது மூடப்படுகின்றன.
பாடசாலைகளை விரைவில் ஆரம்பிப்பதாயின் மாணவர்கள் தடுப்பூசி ஏற்றியிருக்க வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டார்.