மொட்டு கட்சியுடன் இனி கூட்டுசேர தயாரில்லை – டலஸ் அணி திட்டவட்டம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் ஒருபோதும் அரசியல் உறவை புதுப்பித்துக்கொள்ளப்போவதில்லை – என்று டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மேற்படி சபையின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன கூறியவை வருமாறு,

” தற்போதைய நாடாளுமன்றம், மக்கள் எதிர்பார்ப்பை பிரதிபதிக்கவில்லை. எனவே, புதிய மாற்றமொன்றை மக்கள் வலியுறுத்துகின்றனர். புதியவர்களிடம் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும் எனக் கருதுகின்றனர். மக்களின் மனநிலை என்னவென்பதை அறிவதற்கு குறைந்தபட்சம் உள்ளாட்சிசபைத் தேர்தலாவது நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும்.

தேர்தல் நடைபெற்றால் நாம் வெற்றிபெறுவோம். வெல்லும் அணியில் நாம் பிரதான பங்காளியாக இருப்போம். மொட்டு கட்சியுடன் இனி அரசியல் உறவு இல்லை. தேர்தலில் அவர்களுடன் போட்டியிடவும்மாட்டோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles