ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவளித்தால் பஸில் ராஜபக்சவை பிரதமராக்குவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் உறுதியளித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மொட்டு கட்சியின் ஆதரவை பெறுவதற்கு ஜனாதிபதி முற்பட்டுவருகின்றார். அதற்காக அக்கட்சியை திருப்திபடுத்துவதற்காக பல யோசனைகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன. பஸில் ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை தருகின்றேன், எனக்கு ஆதரவு தாருங்கள் என்பதுதான் புதிய முன்மொழிவாக உள்ளது.
பஸில் ராஜபக்ச மக்களால் விரட்டப்பட்டவர், எனினும் மொட்டு கட்சிக்குள் அவருக்கே செல்வாக்கு உள்ளது. மஹிந்த ராஜபக்ச செல்லாக்காசாகிவருகின்றார். இது ரணிலுக்கும் தெரியும், அதனால்தான் பஸில் ராஜபக்சவை குறிவைத்துள்ளார்.
முதலில் பிரதமர் பதவியை தருகின்றேன், எனக்கு பின்னர் நீங்கள் ஜனாதிபதியாக வரலாம், ஆதரவு தாருங்கள் என்பதே ரணிலின் கோரிக்கை. எது எப்படி இருந்தாலும் ரணிலால் வெற்றிபெறமுடியாது. ஏனெனில் அவரின் ஜாதக கட்டமைப்பு அவ்வாறுதான் உள்ளது.
தேர்தலை பிற்போடும் ஜனாதிபதியின் எந்த முயற்சியும் எடுபடாது. அதற்கு நாடாளுமன்றத்தின் ஆதரவும் கிட்டாது” – என்றார்.
மறுப்பு
எனினும், இந்த தகவலை இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி நிராகரித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும், பஸில் பதவி எதையும் கோரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
