ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார நிராகரித்துள்ளார்.
கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த நாள் முதல் ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து இவ்வளவு பேர் வருகிறார்கள், அவ்வளவு பேர் வருகிறார்கள் என சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் யாரும் செல்லவில்லை. போக நினைத்தவர்களும் இப்போது நின்றுவிட்டார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைப் பிடிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும். ஐ.தே.கட்சியையும் மொட்டுக் கட்சியையும் ரணில் விக்கிரமசிங்க குழப்பியுள்ளார் என்பது அவர்களுக்குத் தெரியும்.
நாங்கள் 26 வருடங்கள் ரணிலுடன் இருந்தோம்.அவரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை.முட்டாள்தனமான முடிவுகளை எடுக்கும் எம்.பி.க்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை.ஒன்றிரண்டு பேர் போனாலும் இப்போது அவர்களுக்கு என்ன செய்வதென்று அறியாதுள்ளனர்.” – என்றார்.
