ரணிலுக்கு ஆதரவா? நாடு திரும்பிய கையோடு அநுர விடுத்துள்ள அறிவிப்பு!

“மக்கள் ஆணை இல்லாத தலைவரின் அழைப்பை ஏற்பதற்கு நாம் தயாரில்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்குவரும் தலைவர்களுடன்தான் நாம் பேச்சு நடத்துவோம். ரணில் விக்கிரமசிங்க என்பவர் ராஜபக்சக்களின் காவலன் மாத்திரமே…”

இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இந்திய விஜயத்தின் முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் விமான நிலையத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில், அக்கிராசன உரை ஊடாக ஜனாதிபதி விடுத்த அழைப்பு சம்பந்தமாக வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ ரணில் விக்கிரமசிங்க என்பவர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர். மக்கள் வாக்குகளால் நாடாளுமன்றம்கூட வரமுடியாமல் போனவர். அப்படியான தலைவர்களுடன் எமக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. மக்கள் ஆணையுடன் ஆட்சிக்கு வரும் தலைவர்களுடன்தான் பேச்சு நடத்த வேண்டும் என்பதே எமது கொள்கை.

எந்த தேர்தலை ஒத்திவைத்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. நிதி இல்லை எனவும் கூற முடியாது. ஜனாதிபதியால் 19 தடவைகள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு பணம் இருக்கின்றதெனில், அவ்வாறு செல்லும் தருவாயில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களை அழைத்துச்செல்ல பணம் இருக்கின்றதெனில் தேர்தலை நடத்த ஏன் பணம் இல்லை?

இலங்கை என்பது வளர்ந்துவரும் நாடு. எனவே, சர்வதேச ஒத்துழைப்பு அவசியம். தனித்து செயற்பட முடியாது. இந்திய விஜயம் சம்பந்தமாக விரிவான விளக்கத்தை நாளை (இன்று) ஊடகவியலாளர் சந்திப்பு ஊடாக அறிவிக்கவுள்ளோம்.” – என்றார்.

Related Articles

Latest Articles