சுமார் இருபத்தைந்து வருடங்களாக நீடித்து வந்த சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பில் அறிவித்தமைக்காக பாராளுமன்ற குழு அறை 01இல் இன்று (10) இடம்பெற்ற சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்திற்கு அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் நன்றி தெரிவித்தனர்.
பிள்ளைகளினதும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகமாக 30000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதாகவும், அதற்கமைய மொத்த வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் முதல் முறையாக 7.5 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
அதற்கமைய தொழிற்சங்க கோரிக்கையை நிறைவேற்றியமை குறித்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இக்கலந்துரையாடலின் நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.

ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தின் தலைவர் வசந்தா ஹந்பான்கொட இதன்போது அதிபர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன கல்வி சேவை சங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவை நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கையளித்தார்.
1997ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற இந்நெருக்கடியின் முழுமையான சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு குறிப்பிட்ட கால வரையறை அவசியம் என ஒப்புக்கொண்ட அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதன் ஆரம்ப கட்டமாக மூன்றில் ஒரு பங்கை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒரே தடவையில் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டனர்.
குறித்த சந்திப்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவிக்கையில்,
” நாம் இது தொடர்பில் கடந்த ஜுலை மாதம் 26ஆம் திகதியே முதல் முறையாக கலந்துரையாடினோம். அதன்போது பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், காமினி லொகுகே, கலாநிதி பந்துல குணவர்தன, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, ரமேஷ் பதிரன, லசந்த அழகியவன்ன ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்தோம்.
அது பின்னர் நான்கு பேருக்கு மட்டுப்படுத்தப்பட்டது. அதன்போது பரிந்துரையொன்று முன்வைக்கப்பட்டது.

இது இருபது இருபத்தைந்து ஆண்டுகளாக நீடிக்கும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடாகும். இதனை சீரமைக்கவே கோரிக்கை விடுக்கப்பட்டது. முழு அரச சேவையிலும் சம்பள ஏற்றத்தாழ்வு ஏற்படாத வகையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதே எமது பரிந்துரையாகும்.
தற்போது வரவு செலவுத் திட்டம் வருகிறது. மேற்குறிப்பிட்ட பரிந்துரைக்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி பீடத்தின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும், என்னை சந்தித்த போது இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அதிபர்- ஆசிரியர் சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காணுமாறு கோரியிருந்தனர்.