உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நடந்து கொள்ளும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர்கள் ரெலோ தலைவர்களிடம் இன்று உறைப்பாக – உறுதிபடத் தெரிவித்தனர் என அறியவருகின்றது.
உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் இன்று பிற்பகலில் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.
வன்னியில் வவுனியா மாநகர சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபைகளில் தங்கள் தரப்பு நிர்வாகத்தை அமைப்பதற்கு ஆதரவு வழங்கும்படி ரெலோ தரப்பினர் இந்தச் சந்திப்பின்போது தமிழரசுக் கட்சியிடம் கோரிக்கை விடுத்தனர் எனத் தெரிகின்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளின் விடயத்தில் ரெலோ கட்சியும் அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் எப்படி நடந்து கொள்கின்றனவோ, அதே முறைமையில் வன்னியில் பதில் தரப்படும் எனத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் பதில் பொதுச்செயலாளரும் ஒரே நிலைப்பாடாக உறுதியாக ரெலோ பிரதிநிதிகளிடம் தெரிவித்து விட்டனர் என அறியவந்தது.
அந்தந்தச் சபைகளில் அதிக இடங்களைப் பெற்ற கட்சி ஆட்சி அமைப்பதற்கு உதவும் முன்னைய பகிரங்க அறிவிப்பை ரெலோவும், அது சார்ந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் பின்பற்றுமானால் அதே முறைமையைத் தமிழரசும் தவறாது பின்பற்றும்.
அந்த முறைமைக்கு மாறான போக்கை ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பின்பற்றுமானால், அதேபோல் மாறான முறையைத் தமிழரசுக் கட்சி வன்னியில் பின்பற்றும் என்று தமிழரசின் இரு தலைவர்களும் உறுதிபடத் தெரிவித்தார்கள் என அறியவந்தது.