லிற்றோ நிறுவன பிரதானிகளுக்கு கோப் குழு நாளை அழைப்பு!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு உள்ளிட்ட பல பாராளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன.

அதற்கமைய, நாளை (05) கூடவுள்ள கோப் குழு முன்னிலையில் வரையறுக்கப்பட்ட லிற்றோ கேஸ் லங்கா நிறுவனமும் வரையறுக்கப்பட்ட லிற்றோ கேஸ் டெர்மினல் லங்கா நிறுவனமும் அழைக்கப்பட்டுள்ளன.

கோப் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) சரித ஹேரத் தலைமையில் கூடவுள்ளது.

அதேபோன்று, பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் நாளை கூடவுள்ள அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு முன்னிலையில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அழைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க தலைமையில் நாளை கூடவுள்ளது.

அதற்கு மேலதிகமாக, நாளை அரசாங்க நிதி பற்றிய குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அனுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் கூடவுள்ளதுடன், இதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அழைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 06 ஆம் திகதி கூடவுள்ள கோப் குழு முன்னிலையில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அழைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles