” வடக்கு, கிழக்கில் வாக்கு வேட்டை நடத்துவதற்காகவும், டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவுமே பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.” என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ரோஹன விஜேவீர போன்று பிரபாகரனும் தலைமறைவு வாழ்க்கையே வாழ்ந்தார். புலிகள் அமைப்பின் தாக்குதல்களை கருணா அம்மானே வழிநடத்தினார். அவரின் கை ஆள்தான் பிள்ளையான்.
கருணாவும், பிள்ளையானும் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய பின்னரே அவ்வமைப்பு வீழ்ச்சியடைய ஆரம்பித்தது. ஆணையிறவு உள்ளிட்ட இடங்களை கருணா அம்மானே கைப்பற்றினார்.
புலிகள் அமைப்பில் கிழக்கு போராளிகளே அதிகம் இருந்தனர். கருணா இல்லாது இருந்திருந்தால் படையினரால் கிழக்கு மாகாணத்தை கைப்பற்றி இருக்க முடியாது.
எதிர்காலத்தில் தம்மை பாதுகாப்பார்கள் என்ற நம்பிக்கையிலேயே புலிகள் அமைப்பில் இருந்து விலகி கருணா, பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தை ஆதரித்தார்கள். ஆனால் அவர்கள் காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் தமிழ் வாக்குகளைப் பெறுவதற்கும், டயஸ்போராக்களை திருப்திப்படுத்துவதற்காகவுமே பிள்ளையான் பிடிக்கப்பட்டுள்ளார்.” – என்றார்.
