வட்டவளையில் ஆட்டோ விபத்து: இருவர் காயம்!

ஹட்டனில் இருந்து வட்டவளை மவுண்ட்ஜீன் தோட்டத்திற்குச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 30 அடி பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பயணி ஒருவரும் படுகாயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் காயமடைந்தவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், வட்டவளை குயில்வத்தை எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு அருகில் இன்று (27.01.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட வட்டவளை பொலிஸ் அதிகாரிகள், அதிகவேகத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தியதன் காரணமாக அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனாலேயே முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் தெரிவித்தனர்.

விபத்தில் முச்சக்கரவண்டி பெரும் சேதமடைந்துள்ளதோடு, விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)

Related Articles

Latest Articles