மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு இன்று வருகை தந்திருந்த மாணவர்கள் திரும்பியனுப்பட்டுள்ளனர். சில பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உரிமைக்கான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இன்று மலையகம் தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தப்போராட்டமும், கடையடைப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
போராட்டத்துக்கான அழைப்பு முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்தாலும் சில ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இறுதி நேரத்திலேயே தமது ஆதரவை அறிவித்தன. அதேபோல் போராட்டம் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துடனும் உரிய தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருக்கவில்லை.
இதனால் வழமைபோல் பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி மாணவர்கள் வருகை தந்திருந்தனர். அவ்வாறு வருகை தந்தபின்னர் பலர் திருப்பியனுப்பட்டுள்ளனர்.
உரிய அறிவித்தல்களை முன்கூட்டியே விடுக்காமல், போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என தம்மீது தற்போது குற்றம் சுமத்துவது ஏற்புடையது அல்ல என சில அதிபர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
திட்டமிட்ட அடிப்படையிலான கலந்துரையாடல், உரிய அறிவிப்புகள் இன்மையாலேயே இது விடயத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்கூட்டிய கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தால் மாணவர்களுக்கு இன்று காலையிலேயே பரிதவிக்க வேண்டிய நிலை வந்திருக்காது.
