கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து வீடொன்றின் மீது விழுந்ததில் இரு யுவதிகள் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாலிஎல உடுவரை 6 ம் கட்டை மேற்பிரிவில் வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்ததில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இன்று மாலை சுமார் 5.20 மணியளவில் ஹாலிஎல உடுவரை மேற்பிரிவில் வீட்டில் இரு யுவதிகள் இருந்த வேளை வீட்டின் மீது மண் மேடு சரிந்து விழுந்தமையினால் இரு யுவதிகளும் பலத்த காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த கெந்தகொல்லபதன உடுவரை ஹாலிஎல பகுதியை சேர்ந்த 23 வயதுடைய யுவதி ஒருவரும், இலக்கம் 34 நாபொலவத்த மத்திய வீடு ஹாலிஎல பகுதியை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இருவரின் சடலமும் பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா