21/4 தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுப்பிரிவும் இருந்துள்ளது. இது தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் – என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. இதன்போது 21/4 தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாக வைத்து சபையில் நேற்று முன்தினம் எழுப்பட்டிருந்த கேள்விகளுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று பதிலளித்தார்.
அதன்பின்னர் கருத்து வெளியிடுகையிலேயே ஹக்கீம் இந்த கோரிக்கையை விடுத்தார். இது தொடர்பில் அவர் கூறியதாவது,
“ 21/4 தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி குறித்து எனது உரையின்போது இதற்கு முன்னரும் சில கருத்துகளை வெளியிட்டுள்ளேன். இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு இதன்பின்னணியில் இருந்துள்ளது என்பதற்கான தகவல்கள் உள்ளன. ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையிலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இது பற்றியும் ஆராயப்பட வேண்டும்.
அதேவேளை, இளம் முஸ்லிம் கவிஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டு ஒரு வருடகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் சர்வதேச அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன. அரசின் இவ்வாறான அணுகுமுறையால் நம்பகத்தன்மை ஏற்படுகின்றது.” – என்றார்.










