நுகேகொடை கூட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலை ஸ்ரீங்கா பொதுஜன பெரமுன கட்சி நிராகரித்துள்ளது.
எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்ககூடாது எனவும், மாறாக அவர் பங்கேற்றால் தான் வரப்போவதில்லை எனவும் நாம ல் ராஜபக்ச குறிப்பிட்டார் என தகவல் வெளியானது.
இதனையடுத்தே குறித்த கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் அறிவிப்பு விடுத்தார் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிவி சானகவிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர்,
“ அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. ரணிலோ, மைத்திரியோ, நாமலோ எவரையும் பங்கேற்க வேண்டாம் என எவரும் கூறவில்லை. முதலாவது கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதிகளை அழைப்பதில்லை என்ற முடிவை ஏற்பாட்டுக்குழுவே எடுத்தது.
இது முதல் பேரணிதான், இத்துடன் அது நின்றுவிடப்போவதில்லை. அது தொடரும். அடுத்தடுத்து நடைபெறும் போராட்டங்களில் தலைவர்களை களமிறக்குவோம்.” – என்று குறிப்பிட்டார்.
