பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள உப தபாலகமொன்றில் கடமையாற்றும் தபால் ஊழியர் ஒருவர் தனது 3 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பொய்யான முறைப்பாடு செய்ததன் பேரில் பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தபால் ஊழியர், பகுதி நேரமாக கணணி நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணியை செய்து வந்துள்ளார்.
அவர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக ஒரு தொகை பணத்தை வங்கியிலிருந்து மீள எடுத்து, சம்பள பணத்தை ஊழியர்களுக்கு வழங்கி விட்டு மீதி 3 இலட்சம் ரூபாவுடன் பசறை வீதி 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு நோக்கி சென்றுள்ளார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை தாக்கி மிளகாய் தூளை தூவி விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக பசறை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். எனினும் அப்பகுதியில் உள்ள சீ.சீ.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரது சகோதரியை விசாரித்த போது அவர் கூறியது பொய் என தெரியவந்தது.
குறித்த பணத்தை அவர் தனது மருமகனிடம் கொடுத்து வைத்ததும் தெரியவந்தது. தான் வட்டிக்கு கடனாக பெற்ற பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க இவ்வாறு நாடகமாடியது தெரிய வந்துள்ளது.
பொய்யான தகவலை வழங்கி முறைப்பாடு பதிவு செய்ய முயன்றமைக்கு எதிராக பசறை பொலிஸார்இவர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.