நல்ல தேயிலைகளுடன் கென்டெயினர் ரக வாகனத்தில் சூட்சுமமான முறையில் கடத்தப்பட்ட ஐயாயிரம் கிலோகிராம் மனித பாவனைக்கு உதவாத கழிவுத் தேயிலைகளை கம்பளை கடுகண்ணா வீதி எல்பிட்டிய சந்தியில் வைத்து கைப்பற்றியுள்ளதாக வெலம்பொட பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றினையடுத்து 31.10.2022 அன்று இரவு 11 மணியளவில் குறித்த கழிவுத்தேயிலைகளை கைப்பற்றியதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேற்படி சுற்றிவளைப்பானது வெலம்பொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதசிங்கவின் ஆலோசனைக்கமைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி இந்திக்க லலித் தலைமையிலான பொலிஸாரரினால் மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது கைப்பற்றப்பட்ட கழிவுத்தேயிலைகளை இலங்கை தேயிலைச் சபையின் கம்பளை கிளை அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்










